டியர் காமிரேட்ஸ்,
ஏற்கனவே சொன்னபடி சென்ற வாரம் முழுவதும் முருகனின் அறுபடை வீடுகளையும், சில குறிப்பிட்ட சிவதலங்களையும் நோக்கி ஒரு சூறாவளி ஆன்மீக பயணம் மேற்கொண்டு இருந்தேன். அப்போது நேரம் கிடைக்கும்போது சில பழைய நண்பர்களையும், சில புத்தக வியாபாரிகளையும் சந்தித்தேன்.
அதில் சுவாரஸ்யமான பல விஷயங்கள் - பதிவிடவேண்டிய அளவுக்கு சுவையானவை - இருந்ததால் இன்றுமுதல் ஒரு வாரத்திற்கு இந்த பயண சம்பந்தமான காமிக்ஸ் பதிவுகள் இங்கே இடம்பெறும். நேற்றுதான் சென்னை வந்தடைந்ததால் பதிவுகள் ஆரம்பம் ஆகின்றன.
முதலாவது மற்றும் முக்கியமானது நான் பாபநாசத்தில் சந்தித்த இமாம் பாய் அவர்களை பற்றியதே.
கடந்த வாரம் ரிலீஸ் ஆன (முன்னாள் நண்பர் ஜெயம் ரவி நடித்த) நிமிர்ந்து நில் படத்தின் விளம்பர நிர்வாகம் நம் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் சில பல பிரச்சினைகளால் படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகாமல் மறுநாள் இரவுதான் ரிலீஸ் ஆனது. இதில் (என்னுடைய வற்புறுத்தலின் பேரில் – நட்புக்காக) திருச்சி மற்றும் சுற்றுப்புறங்களில் இருக்கும் 26 தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்ய உரிமை வாங்கினார் என்னுடைய நண்பர். ஆனால் படம் ரிலீஸ் ஆனபோது திருச்சியை தவிர தமிழகத்தின் மற்ற இடங்களில் தான் ரிலீஸ் ஆனது. இந்த பிரச்சினையால் என்னுடைய ஆன்மீக சுற்றுபயணத்தில் நான் திருச்சியில் ஒரு நாளை கழிக்க நேரிட்டது. (படம் சரியாக ஒருவாரம் கழித்து சென்ற சனிக்கிழமை அன்றுதான் திருச்சியில் ரிலீஸ் ஆனது தனி கதை).
அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலைக்கு கும்பகோணம் செல்ல வேண்டி இருந்ததால் வழியில் இருக்கும் பாபநாசம் ஊரில் நண்பர் இமாம் பாய் அவர்களை சந்திக்கலாம் என்று முடிவெடுத்தேன். இமாம் பாய் கடந்த மூன்று மாதங்களாக என்னை தொடர்ந்து தொலைபேசியில் அழைத்துக்கொண்டே இருந்தார். இப்போதுதான் நேரமும், வசதியும் கூடி வந்ததால் அவரை பாபநாசத்தில் சந்தித்தேன்.
இமாம் பாயின் குடும்ப நண்பர் (?!?1??) தான் பாபநாசத்தில் பத்து வருடங்களுக்கு முன்பு வரை நியூஸ் பேப்பர் ஏஜென்ட். 2001ல் அவர் மறைவுக்கு பிறகு அவரது வீடு+கடை (குடோன்?) இரண்டுமே பூட்டப்பட்டு தான் இருந்ததாம். சமீபத்தில் அதனை இமாம் பாய் திறந்து பார்த்தபோது அவர் கண்ணில் முதலில் பட்டது பல பழைய புத்தக கட்டுகள் தான். அதனால் தான் இமாம் பாய் என்னை தொடர்ந்து அழைத்துக்கொண்டே இருந்தார்.
நான் சென்றபோது இமாம் பாய் அவசரமாக மலேசியா கிளம்பிக்கொண்டு இருந்தார். அதனால் அவரிடம் அதிகமாக அளவளாவ முடியவில்லை. இருந்தும் அவர் என்னிடம் கொடுத்த பெட்டியில் இருந்த புத்தகங்களில் முக்கியமான ஒன்றான இரத்தக் கரைகளை பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை.
(இந்த போட்டோ மறுபடியும் நான் வியாழக்கிழமை அன்று நான் திருச்சியில் இருக்கும்போது எடுக்கப்பட்டது. ஆனால் சம்பவங்களும், சந்திப்புகளும் நடந்தது திங்கள் கிழமை அன்றுதான்).
இந்த புத்தகம் சுமார் 20 வருடங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டது. ஆனால் இப்போதும் பின் பிரிக்காமல் நல்ல கண்டிஷனில் இருந்தது. மொத்தம் 74 புத்தகங்கள் இங்கே கிடைத்தது. இதோ அந்த மொத்த புத்தகங்களின் புகைப்படங்கள்:
இமாம் பாய் மறுபடியும் திரும்ப வந்தவுடன் அவரது குடோனில் இருக்கும் மற்ற 42 காமிக்ஸ் செட்டுகளையும் கைப்பற்றுவதுதான் என்னுடைய அடுத்த முக்கியமான வேலை. ஒரே ஒரு விதயம்: இந்த புத்தகங்களை இமாம் பாய் என்ன விலைக்கு கொடுத்தார் தெரியுமா? ஒவ்வொரு புத்தகமும் 5 ருபாய் தான். ஆக 74 புத்தகங்களும் 370 ரூபாய்க்கே வாங்கினேன்.
சோகக்கதைகளை சொல்லி சில மாபாதகர்கள் காமிக்ஸ் புத்தகங்களை கண்டபடி விலையேற்றி வைத்து இருக்கிறார்கள். இந்தவாரம் கூட சென்னையில் நண்பர் ஒருவர் 200 புத்தகங்கள் கொண்ட செட் ஒன்றை ஐம்பதாயிரம் ருபாய் என்று சொல்லி என்னிடம் பேசினார். அந்த 200 புத்தகங்களில் 2013ம் ஆண்டு நமது லயன் முத்து காமிக்ஸ் ஸ்டாலில் விற்ற 120 புத்தகங்கள் + ராணி காமிக்ஸ் 50 என்று இருந்தன. நான் அவரிடம் இந்த புத்தகங்களின் உண்மையான விலை ஆயிரம் ருபாய் முதல் இரண்டாயிரம் தான் என்று சொல்லிவிட்டு வந்தேன்.
இதுபோல சிலர் அதிகப்படியாக விலை வைத்து தேவை இல்லாமல் ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்த விலை ஒரு சவுக்கடியாக இருக்க வேண்டுமென்றேதான் நான் இந்த புத்தகங்களையும், அவற்றின் விலையையும் இங்கே வெளியிட்டுள்ளேன்.
இந்த புத்தகங்கள் இங்கே பாபநாசத்தில் வாங்கப்பட்டவை என்பதை உறுதி செய்யவே திருச்சி பதிப்பு தினமணி நாளிதழின் முன்னே அவை வைக்கப்பட்டு போட்டோ எடுக்கப்பட்டுள்ளன. நண்பர்களே, நீங்களும் சமீபத்தில் இது போல வாங்கிய புத்த்தகங்களை பட்டியலிடலாமே? அதனால் நாம் வாங்கும் புத்தகங்களின் விலை நம் அனைவருக்குமே தெரிய வருவதுடன் மற்றவர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.