Sunday 20 September 2015

ஓவியர் செல்லம் நினைவு கூர்தல் கூட்டம்

டியர் காமிரேட்ஸ்,

கடந்த வெள்ளிக்கிழமை எனது வாழ்நாளில் மறக்கவியலாத நாட்களில் ஒன்றாகி விட்டது. அன்று தான் தமிழகத்தின் தலைசிறந்த சித்திரக்கதை ஓவியரும், (கொண்டாடப்படவேண்டிய) அரசியல் கார்ட்டூனிஸ்ட்டுமான திரு செல்லப்பன் (எ) செல்லம் அவர்களுக்கு ஒரு நினைவு கூர்தல் கூட்டம் நடந்தது.

வார இறுதியில் இல்லாமல் பணி நாளிலேயே இருந்தாலும், ஆறு மணிக்கு அல்லாமல் ஐந்து மணிக்கே என்றிருந்தாலும், பலரும் வந்து அரங்கினை நிறைத்து, விழாவினை சிறப்பித்தனர். குறிப்பாக ஓவியர் ட்ராட்ஸ்கி மருது ஐயா, ஓவியர் ஜெயராஜ், ஓவியர் மாருதி, ஓவியர் மணியம் செல்வம் அவர்கள், ஓவியர் திரு அரஸ், ஓவியர் “ஓவியர்” அவர்கள் மற்றும் திரு செல்லப்பன் அவர்களின் குடும்பத்தினர் என்று அனைவரும் கலந்துக்கொண்டதால் இது ஒரு முக்கியமான நினைவாக அமைந்தது.

விழாவின் ஆரம்பத்தில் ஓவியர் செல்லம் அவர்களின் சித்திரக் கடலில் இருந்து ஒரு சில முத்துக்களை Slide Show ஆக காண்பித்தனர். அதன் பின்னர் மக்களுக்கு செல்லப்பன் அவர்களின் வாழ்க்கை Chronological Orderல் அடியேனால் நினைவூட்டப்பட்டது. முதல்முறையாக ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்வதால், ஓரிரு குறைகள், Shortcomings தெரிந்தாலும், நிகழ்வை சிறப்பாகவே நடத்தியதாக அனைவரும் கூறியது நிறைவைத் தந்தது.

மேலும் திரு ஞானி ஐயா அவர்களின் பேச்சு அமரர் செல்லப்பனை எங்கள் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது என்றே சொல்லலாம். குறிப்பாக வெள்ளை வேட்டியின் ஒரு முனையை கையில் பிடித்தபடி, கம்பீரமாக நடக்கும் அவரது அழகை சிலாகித்து பேசினார். செல்லப்பன் ஐயாவும் இவரும் ஏறக்குறைய 20 வருடங்கள் ஒரே குடியிருப்பில் இருந்ததோடில்லாமல், பல ஆண்டுகள் ஒன்றாகவே பணிபுரிந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரு ஜெயராஜ் அவர்கள் பேச்சில் சொன்ன ஒரு முக்கியமான விஷயம் “நாய் அங்கேயே இருக்கட்டுமே?” என்பது தான் இந்த கூட்டத்தின் ஹை லைட். அது என்ன நாய்? அது ஏன் அங்கேயே இருக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள, இந்த வீடியோ காணொளியை முழுவதுமாக காணுங்கள். ஜெயராஜ் ஐயா செல்லப்பன் அவர்களின் சிறப்பம்சங்களை அழகாக விளக்கியதும், அதை அவர் சொன்ன விதமும் மிகவும் சிறப்பாக இருந்தது.
ஓவியர் திரு மருதி அவர்கள், தான் ஏழ்மையின் நிழலில் இருந்தபோது அமரர் செல்லப்பன் அவர்கள் எவ்விதம் தனக்கு உதவி புரிந்தார்? என்பதை சொன்ன விதம் அவரது உதவும் மனப்பாங்கை வெளிப்படுத்தியது. மேலும் இரண்டு, மூன்று சுவையான சங்கதிகளையும், சம்பவங்களையும் அவர் சொன்ன விதம் அவரது ஓவியத்தை போலவே மிகவும் சிறப்பாக இருந்தது.
திரு மணியம் செல்வன் அவர்களது அமைதியான பேச்சு, செல்லப்பன் அவர்கள் வரையும் நேர்த்தியை நமக்கெல்லாம் விளக்கியது. ஒரு கதையின் தலைப்பை தான் எழுத எடுத்துக்கொள்ளும் அதே நேரத்தில், நான்கு நகைச்சுவை துணுக்குகளை அழகாக வரைந்து முடித்து விடும் செல்லப்பன் அவர்களது வேகத்தை பற்றி அவர் சொன்ன முறை, நாம் எவ்வளவு பெரிய திறமைசாலியை இழந்திருக்கிறோம்? என்பதை உணர்த்தியது.
ஓவியர் திரு அரஸ் அவர்கள்  திரு செல்லப்பன் அவர்களை சந்திக்க விரும்பியதையும், அவரது மரணச்செய்தி கேட்டு, அவரது வீட்டிற்கு வந்து நினைவு அஞ்சலியை செலுத்தியதையும் அழகாக குறிப்பிட்டார். ஓவியர் திரு கே முரளிதரன் அவர்கள் பல அயல்நாட்டு ஓவியர்களின் ஓவியங்களுடன் செல்லப்பன் அவர்களது திறமையை ஒப்பிட்டு பேசினார். குறிப்பாக கோவாவைச் சேர்ந்த Mario Mirandaவின் ஸ்டைலும், செல்லப்பன் அவர்களது பாணியும் எப்படி இருந்தது? என்று ஆழகாக விளக்கினார்.
திரு ட்ராட்ஸ்கி மருது ஐயா அவர்கள் செல்லப்பன் அவர்கள் எவ்வளவு பெரிய அரசியல் கருத்து சித்திர ஓவியர் என்பதை சில பல உதாரணங்களுடன் விளக்கினார். குறிப்பாக 1967 ஆம் ஆண்டு தேர்தலில் செல்லப்பன் அவர்களது ஓவியங்களின் பங்கினையும், எவ்வாறு அவரது ஓவியங்கள் Strong, Definitive கோட்டோவியங்கலை கொண்டிருந்தது என்று Techinical ஆக விளக்கியதும் இந்த கூட்டத்தின் சிறப்பம்சமாக அமைந்தது.
திரு செல்லப்பன் அவர்களது நெடுநாள் நண்பரின் மகனும், பின்னர் மருமகனாக மாறிய திரு துரை அவர்கள் அனைவருக்கும் நன்றியுரை தெரிவித்தார். திரு ஓவியர் அவர்கள் செல்லப்பன் அவர்களது ஓவியங்களை பற்றி சிலாகித்து பேசியது அழகாகவும், அருமையாகவும் இருந்தது. திரு குமரகுருபரன் அவர்கள் கூட்டத்திற்கு வந்த அனைவருக்கும் நன்றியை கூறி, விழாவினை முடித்து வைத்தார்.
இந்த அருமையான விழாவை நேரில் காண இயலாதவர்களுக்காக, இதோ வீடியோ காணொளி: 





3 comments:

  1. @கிங் விஸ்வா

    என் பள்ளி தோழனாகவே பாவிக்கும், பலே பாலுவை கண்முன்னே காட்டி...அறிமுகம் செய்து இந்த காமிக்ஸ் உலகிற்கு கைபிடித்து அழைத்து வந்த ஓவியர் திரு செல்லம் அவர்களின் மறைவுக்கு நினைவு கூர்ந்த கூட்டத்தின் சிறு குறிப்புகளும்...நீண்ட விடியோ தொகுப்பும் கொடுத்த உங்களுக்கு என் நன்றிகள்..! வீடியோ இன்னும் பார்க்கவில்லை..அதை இரவு முழுதும் டவுன்லோட் போட்டு காலையில் பார்த்தால்..லிங்க் கட்.. :( மீண்டும் போட்டுள்ளேன்..பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன் விஸ்வா..!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சார்....மறக்க இயலா நினைவு செல்லம் அவர்கள் ...பலே பாலுவுக்காக அலைந்த நாட்கள் அலாதியானவை...

    ReplyDelete
  3. @கிங் விஸ்வா

    என் பள்ளி தோழனாகவே பாவிக்கும், பலே பாலுவை கண்முன்னே காட்டி...அறிமுகம் செய்து இந்த காமிக்ஸ் உலகிற்கு கைபிடித்து அழைத்து வந்த ஓவியர் திரு செல்லம் அவர்களின் மறைவுக்கு நினைவு கூர்ந்த கூட்டத்தின் சிறு குறிப்புகளும்...நீண்ட விடியோ தொகுப்பும் கொடுத்த உங்களுக்கு என் நன்றிகள்..! வீடியோ இன்னும் பார்க்கவில்லை..அதை இரவு முழுதும் டவுன்லோட் போட்டு காலையில் பார்த்தால்..லிங்க் கட்.. :( மீண்டும் போட்டுள்ளேன்..பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன் விஸ்வா..!

    ReplyDelete